Pages

Sunday, March 10, 2013

Wonderful article by Maryam Shaheeda regarding current issues against Muslims in Sri Lanka and Revealing the facts behind that. Translated into Tamil:

பொது பல சேனாவுக்கு நன்றி

Bodu Bala Sena  -மர்யம் ஷஹீதா – கண்டி, தமிழாக்கம்: எம்.எல்.ஹாஜா சகாப்தீன் புத்தளம்-
அண்மையில் “ராவய” சிங்கள பத்திரிகையில் எமது சகோதரி ஒருவரால் எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்ட கட்டுரை வாசகர்களுக்காக பதிவேற்றப்படுகின்றது. கட்டுரையின் இறுதியில் இரண்டு ராவய  வாசகர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
சாதாரண முஸ்லிம் பெண்ணொருத்தியென்ற வகையில் இந்த சிக்கலான விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் இவ்வாறான கட்டுரையொன்றை எழுத நேரிட்டது ஒருவித விதிசார்ந்த செயலாகும். 
ஏனெனில் கடந்து போன பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் மக்களது ஒற்றுமையையும் சமாதானத்தையும் உறுதிப்படுத்தித் தருமாறு சகல வல்லமை கொண்ட அல்லாஹ் தஆலாவின் முன்னிலையில் பூரா உலக முஸ்லிம்களும் இறைஞ்சினார்கள்.  ஆனால் அந்த சமாதானம் எம்மை வந்தடைய வேறொரு சமயத்தை  கொள்கையை கடைப்பிடித்தொழுகும் குழுவினர் எமக்கு பக்க பலமாக இருப்பார்கள் என்றும் அல்லாஹ்வுக்கும் – மேலதிகமாக அவர்களுக்கும் நன்றி செலுத்த வேண்டி வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை.
எவரது வரலாறுகளையும் ஆராய்ந்தால் இலங்கைக்குள்ளே வாழ்கின்ற எந்தவொரு இனத்தவராலும் இந்த நாடு என்னுடையது என்று கூற முடியுமா? என எண்ணிப்பார்க்க வேண்டும்.  எல்லோரும் வந்தேறு குடிகளே என நாம் அறிவோம். ஆனால் உண்மையாகவே  பெரும்பான்மையினருக்கு இயல்பாகவே (இந்த நாட்டின்)  உரிமை உரித்துடையது என்பதையும் நான் நம்புகின்றேன். பொதுபல சேனா அமைப்பு கூறுவது போன்று  அவர்கள் பிரதான பயிரென்றால் சிறுபான்மையினர் கீழ்மட்ட பயிர்களாவோம். உண்மைதான். ஆனால் பிரதான பயிரிலிருந்து  கிடைக்கும் அறுவடை வருடத்துக்கு ஒரு முறை அல்லது இருமுறையாக இருந்தாலும் கீழ்மட்ட பயிரானது மண்ணை வளப்படுத்தி பிரதான பயிருக்குத் தேவையான போஷாக்கு பதார்த்தங்களை  வழங்கி வருடம் பூராவும் பலன் தருகிறது என்பது வேறொரு விடயமாகும்.
முஸ்லிம்களுடைய ஹலால் எனப்படும் சமயசார் சட்டத்தை பிடித்துக் கொண்டு நாடு பூராவும் முஸ்லிம் விரோத அலையை உருவாக்கிய அதிஉத்தம பௌத்த படையணியினர் இவ்வாறு சொல்கின்றனர்: ஹலால் என்பது முஸ்லிம்களின் உணவு மற்றும் அவர்களது பாவனைப் பொருட்களோடு மட்டுபடுத்தப்பட்ட விடயம் எனவாகும். கடந்த காலங்களில் இது (ஹலால்) பற்றி தேவைக்கதிகமாகவும் (அவர்களுக்கு) தெளிவு படுத்தினாலும் இன்னுமே அதனைப் புரிந்து கொள்ளாமை கவலைக்குரியதாகும். பாவமென கருதும் சகலதும் ஹராம் அல்லது தடைசெய்யப்பட்டது எனவும் அவ்வாறல்லாதவை ஹலால் அல்லது பாவிக்கக் கூடியவை எனவும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
எனக்கு விளங்காதது ஒரேயொரு விடயம்தான்.  பௌத்த தர்மத்தில் பஞ்ச சீலத்தின்படி உயிர் கொல்வது ஹராம் ஆகும்.  அப்படியென்றால் இறைச்சி உண்பதும் முற்றிலும் தடையாகும். அல்லாஹ்வின் பெயரைக் கூறி  அவனை ஞாபகப்படுத்தி ஹலாலாக கொல்லப்படுகின்ற விலங்குகளின் மாமிசம் முஸ்லிம்களுக்கு ஆகுமானதாகும். அது எமது சமயம் சார் கற்பித்தலாகும். அதனை நாங்கள் நிறைவேற்றுகிறோம்.  ஆனால் பௌத்தர்களுக்கு இறைச்சி உண்பது ஆகுமானதல்ல. அப்படியென்றால் அதைப்பற்றி ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? முஸ்லிம்கள் பலாத்காரமாக ஹலாலை உண்ண வைக்கிறார்கள் என தமது மக்களுக்கு சொல்லித் திரிபவர்கள் சொல்ல வேண்டியது ‘முஸ்லிம் கடைகளில் இறைச்சி வாங்காதீர்கள்’ என்றல்ல. ‘இறைச்சி மீன் எதனையும் சாப்பிடாதீர்கள். அது பௌத்த தர்மத்துக்கு முரணானது’ என்றாகும். ‘முட்டை, இறைச்சி, எலும்பு மற்றும்  தோல் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பல்வேறு உணவு வகைகள், இனிப்பு பண்டங்கள், பொருட்கள் போன்றவற்றை கட்டாயமாக பௌத்த மக்கள் தவிர்க்க வேண்டும் அல்லவா? பாவத்தில் மூழ்கி முதலாவது சில் பதத்தை  கடைப்பிடிக்காத பொது மக்களுக்கு சொல்ல வேண்டியது  ‘ஹலாலை தவிருங்கள்’ என்பதல்ல. நான் மேலே கூறியவாறு ‘இறைச்சி, மீன், முட்டை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்’ என்றாகும்.  அப்போது இயல்பாகவே  அவர்கள் ஹலால் உண்பது நின்று விடும்.
கௌரவத்துக்குரிய பொது பல சேனாவினரே புத்தருடைய கொள்கைகயையும் படிப்பினையையும் முதலில் நடைமுறைப்படுத்துங்கள். உணவு பானங்களை அருந்தும் போது மேற் சொன்னவாறு எங்களுக்கு ஆகாதது விலங்குகள் சார்ந்த உணவு மட்டுமே. அது உங்களுக்கும் உகந்ததல்லாததால் மொத்த பௌத்த மக்களும் தமது சமய சார் படிப்பினைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஹலால் இயல்பாகவே தவிர்க்கப்படுமல்லவா? மற்றொரு புறம் ஹலால் ஹராம் இஸ்லாத்தில் கடைபிடிப்பது மதுபானங்களுக்கும் போதை வஸ்துக்களுக்குமாகும். அது பஞ்ச சீலத்தின் மூன்றாவது பதமாகும் அல்லவா?  அடிக்கு அடி உருவாகும் தவறணைகளை மூடி விடுவது  இந்த பௌத்த நாட்டில் (கட்டாயம்) செய்யப்பட வேண்டியதொன்றல்லவா?  அவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடாமல் தவிர்ந்து கொள்வது தானாகவே ஹலாலைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியல்லவா? பௌத்த தர்மத்துள் அருவருத்து புறக்கணிக்கப்பட்ட அந்த அதர்ம செயல்பாட்டினை உங்கள் எல்லாரையும் மிஞ்சி சிறுபான்மையினர் கடைபிடிப்பது நீங்கள் பொறாமைப்பட வேண்டிய விடயமா?
உணவுக்கு மேலதிகமாக உள்ள மற்றும் ஹலால் ரீதியிலான வாழ்க்கை முறைகளாவன களவு. வஞ்சனை. பகைமை, குரோதம்  ஆகியவற்றைத் தவிர்ந்து நடந்து கொள்ளலாகும்.  அது உங்களுக்கு பிரச்சினைக்குரியதா? அப்படியென்றால் பௌத்த தர்மத்தில் அவ்வாறான எண்ணக்கருக்கள் கற்பிக்கப்பட்டிருப்பது ஏன்?
இந்த நாடு முஸ்லிம் மயமாகி விடும் என நீங்கள் எல்லோரும் அஞ்சுகிறீர்கள். அவ்வாறு எண்ண உங்களுக்கு நியாயமான காரணங்கள் உண்டு. அதில் முதலாவது முஸ்லிம் மக்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரிப்பதாகும். கௌரவ அறிஞர்களே ‘சிறிய குடும்பம் தங்கம்’ -  ‘நாம் இருவர் நமக்கிருவர்’ என்பது போன்ற எண்ணக்கருக்களை இந்த நாட்டில் அறிமுகப்படுத்தியவர்கள் முஸ்லிம்களா?  முத்திரை கடித உறைகள் என்பவற்றில்கூட இந்த கூற்றுகளை பதித்து  ஒரு குடும்பத்துக்கு ஒரு பிள்ளையோ அல்லது இருவரோ போதும் என்ற ‘பெஷனை(நாகரீகத்தை)’ மேற்குலக நாடுகளிலிருந்து இந்த நாட்டுக்குள் கொண்டு வந்தவர்கள் கத்தோலிக்க அமைப்புக்கள் என்பதை நாம் அறிவோம்.  இன்றும்கூட தெளிவாகவும் வெளிப்படையாகவும் பகிரங்கமாகவே  தம் சமயத்தை பரப்பியவாறு ஒட்டுமொத்த பௌத்த மக்களில் பெரும்பான்மையினரை தமது சமயத்துக்குள்  ஈர்த்துக் கொண்டு வானொலி தொலைக்காட்சி  அலை வரிசைகளைக்கூட அச்சமில்லாமல்  பாவிக்கின்ற அவர்கள் உண்மையிலேயே மிகவுமே கெட்டிக்காரர்கள். முஸ்லிம்களுக்கு அவ்வாறான (சமய) பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டிய தேவை இருந்தால் அவ்வாறான பிரச்சார வழிமுறைகளுக்கு செல்ல வேண்டுமல்லவா?  அவ்வாறான எந்தவொரு (சமயத்தின்பால்) அழைப்பு முறையும் எம்மிடம் இல்லை என்பது ஒட்டுமொத்த நாடுமே அறிந்த விடயமாகும்.
கௌரவ அறிஞர்களே ‘சப்ப துக்க நிஸ்ஸசரண நிப்பாண சச்சி கரண்தாய’ என இவ்வுலக துன்பங்களைக்  கடந்து சுவர்க்கத்தை அடையும்  நோக்கில் துறவற வாழ்க்கைக்குள்  பிரவேசிக்கின்ற  சிறிய சாமநேர (சிறுவயது பிக்கு) ஒருவர் இளமைப் பருவத்தை கடந்து முதுமையடையும் வரை  அதனை அடைந்து கொள்ள குறைந்தளவு ‘சகுர்தகாமி’ வழியிலாவது செல்ல முடியாமலிருக்கின்றனர். காரணம் சம்சார வாழ்க்கையிலீடுபடும் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பௌத்த மதகுருமார் பணிபுரிய வேண்டும்  என்பதனாலேயல்லவா?  சகல உயிரினங்களும் கவலையடையாதிருக்கட்டும் என்று மனப்பூர்வமாக சொல்பவர்கள் சிறுபான்மையினரை மறப்பது ஆகாது.
பஞ்ச சீலத்தை ஒழுங்காக பாதுகாக்கும் பண்பான சமூகமொன்றில் சிறுபான்மையினருக்கு தலைதூக்க முடியாது.  மற்றவர்களின்பால் பொறாமை ஏற்படுவதானது தனக்குள்ளே குறைகளைக் காணும் போதாகும். தந்தை மூலம் கருத்தரித்த மகள் பிள்ளைகளை பிரசவிக்கும் நாடொன்றில், தாயை தந்தையைக் கொன்றுவிட்டு சொத்துக்களை அனுபவிக்கும் நாடொன்றில்,  உடம்பில் முக்கால் பாகத்தை வெளிக்காட்டி காம உணர்ச்சிகளைத் தூண்டி விடும் நாடொன்றில், களவில் திளைத்து மற்றவரைக் அண்டி வாழ்ந்து புத்தருடைய சிலைகளைக்கூட குடையும் நாடொன்றில், போதையேற்றி இன்பம் காண அனுமதிப் பத்திரம் வழங்கும் நாடொன்றில் சுத்தமாக சொல்லப் போனால் இந்த எல்லாக் அலங்கோலங்களுக்கும் இடையில் சுத்தமான பௌத்த நாடு இது என்று சொல்லிக் கொள்ளுகின்ற பூமியொன்றில் எப்படியோ தமது சமய படிப்பினைகளை கடைப்பிடிக்க  முயற்சிக்கும் முஸ்லிம் மக்கள் உங்களது கண்களுக்கு தோற்றுவது தீவிரவாதியாக இருந்தால் இந்த அலங்கோலங்களை பார்த்துக் கொண்டு பௌத்தர்கள் என்று வாயால் மட்டும் சொல்லுகின்றவர்களைப் பார்க்கும்போது அவர்கள் எங்கள் பார்வையில் கோமாளிகளைப் போல தெரிவது தவறானதல்ல.
சொர்க்கத்தை காண்பதையே பரமநோக்கமாகக் கொண்ட பௌத்தன் செத்து செத்து மீண்டும் பிறந்தாலும் எங்களுக்கு அப்படியொன்று இல்லாததால்  நிச்சயமாக மீண்டும் நாங்கள் இந்த பூமியில் பிறக்க மாட்டோம்.  எனவே நாங்கள் பிறந்த நாட்டின் மேல் அன்பு கொள்வோமே ஒழிய (அதனை) உரிமையாக்கிக் கொள்ள நாங்கள் நினைக்கவே மாட்டோம். பௌத்தனும்கூட மீண்டும் பிறப்பதை விரும்புகிறானில்லை என்பதனை செத்த வீடுகளிலே பெனர் (பதாதை) மூலமாக நாங்கள் காணுகிறோம். அப்படியென்றால் இந்தப் பேராசை எங்கள் இரு தரப்பினருக்குமே உகந்ததல்ல.
 ’ஏஹி பஸ்ஷிகோ’ என்று கூறிக் கொண்டாலும்  மற்ற சமயத்தவர்களுக்கு முன்மாதிரியாக வாழும் கொள்கைக்கு மதிப்பளிக்கும் பௌத்தனாக இல்லாவிட்டால் அவ்வாறு தனது சமயத்தை பரப்ப முடியாது.  முதலில் உங்களது மக்களை நல்ல பௌத்தர்களாக்குங்கள். அப்போது எங்களுக்கும் பேராசையிலிருந்து விடுபடலாம். 
எப்படியாயினும் இந்த சகல எதிர்ப்புகளும் பகிஷ்கரிப்புகளும் காரணமாக முஸ்லிம் மக்கள் முன்னெப்போதுமில்லாதவாறு ஒற்றுமைப்பட்டுள்ளார்கள். அடி விழுகின்ற அளவுக்கு ஏற்ப  இன்னும் பலமடைந்து அல்லாஹ்வின் மேல் பக்தி கொள்ளும் அளவிற்கு அவர்கள் துணிந்துள்ளார்கள். ஹராம் ஹலால் பற்றியே கவனிக்காத ஒருசில முஸ்லிம்கள்கூட ஹலால் சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைந்துள்ளார்கள். இந்த திருப்பு முனை முஸ்லிம் மக்களுக்கு தேவையானதாக இருந்தது.  இதுவரை ‘இலங்கையர்கள்’ என்ற வகையிலே இருந்த முஸ்லிம்கள் இப்போது ‘இலங்கை முஸ்லிம்கள்’ என்ற உணர்வுடன் ஒன்றுபட்டுள்ளார்கள்.  முன்னெப்போதையும் விட மற்றவர்களது சுக துக்கங்களிலே பங்கு கொள்கின்ற உண்மையான முஸ்லிம்களாக மாறியுள்ளார்கள். இந்த பட்டை தீட்டுதலை  எங்களுக்கு செய்து தந்தது பொதுபல சேனாவாகிய நீங்களே!  எங்களை மென்மேலும் அல்லாஹ்விடம் நெருங்க வைத்தவர்கள் நீங்களே! எனவே  உங்கள் அனைவருக்கும் நன்றி.
ஆயிரம் முறை நன்றி.
அதற்கு ராவய (சிங்கள சகோதர) வாசகர்களிடமிருந்து வந்த பாராட்டுக்கள் 2013.03.03 ம் திகதி பத்திரிகையில் பிரசுரமாகின. அவை இதோ…
01. மரியம் ஷஹீதாவின் ‘பொதுபல சேனாவுக்கு நன்றி’ கட்டுரை பொது பல சேனா (நச்சுப்) பாம்புகளுக்கு நல்லதொரு பாடம். தேவதத்த (புத்தருடைய எதிரி) பரம்பரை வழியில் நடந்து பொதுபல சேனா என்ற பெயரில் உலக காப்பாளராகிய புத்தருடைய களங்கமில்லா தர்மத்தை கேவலப்படுத்துகின்ற இழிவானவர்களுக்கு நீதியற்ற இலங்கையினுள்ளே பிரபலமடைவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சிறைக்கனுப்ப வேண்டிய குற்றவாளிகளோடு கொண்டாட்டங்களை நடாத்தும் தலைவனொருவன் இருக்கும்போது  இன்னும் பல்வேறு பல சேனாக்கள் தோன்றலாம்.  அந்த எல்லோரும் ராஜபக்ஷ ரெஜிமண்ட்டுக்கெதிராக மக்களுக்கிடையே பிரச்சினைகள் உருவாவாக விடாது நீதியற்ற முறையில் இடமளிக்காதது போன்றே ராஜபக்ஷ ரெஜிமன்டும் அவர்களைப் பாதுகாக்கிறது.
சிசிர – பதவியாவிலிருந்து. 
02. மரியம் ஷஹீதா. நீங்கள் ஒரு சாதாரண முஸ்லிம் பெண். நான் சாதாரண பௌத்த பெண். நீங்கள் பெரும்பான்மை பௌத்தர்களென்று சொல்லிக் கொள்கின்றவர்களுக்கிடையே இல்லாத அளவு பௌத்த தர்மத்தைப் பற்றி தெரிந்து வைத்திருக்குமளவு உள்ள அறிவையிட்டு நான் (உங்களை) மதிக்கிறேன். உண்மையான பௌத்த தர்மத்தை பின்பற்றும் அதே சமயம் சகல மனிதர்களின் பேரிலும் அன்பு செலுத்துகின்றவர்களும் இந்த பூமியில் உள்ளார்கள் என்பதை சகோதரி  உங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நீங்கள் எந்த சமயத்தவராக இருந்தாலும் காலத்துக்குக் காலம் ஏற்படுகின்ற இவ்வாறானவற்றினால் அதிர்ச்சியுறாது அவை அறிவிலிகளின் செயல் என புறந்தள்ளுவதன் மூலம் உங்களதும் எனதும் சகலரினதும் சமயங்கள் மட்டுமல்ல மனித ஒழுக்கங்கள் பற்றிய சிக்கல்களும் தோன்றாது. 30 வருடங்களாக அனுபவித்த வேதனைகளைப் பற்றி நினைத்து அறிவுபூர்வமாக நடந்து கொள்வது இவ்வாறான பிரச்சினையின் போது செய்ய வேண்டியதொன்றாகும்.
தாரகா – ஜயவர்தனபுரவிலிருந்து.

No comments:

Post a Comment